Wednesday, 7 December 2011

சுயமாக சுவாசிக்க

புதுமனைப் புகுவிழா
மாறாக
புதுவாழ்வில் புகும்விழா
என்றும்கூட
அழைக்கப்படலாம்
தன்னிறைவோடு....!

நடுத்தரங்களின்
உயர்ந்தபட்ச நோக்கமாக
பலவருட சேமிப்பின்
அடையாளமாக
இதுவே
இருக்ககூடும்...!

கம்பீரமாய் நின்று
நாம் வாழும் வாழ்வினை
அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும்
நம் இலட்சிய வீட்டின்
ஒவ்வொரு செங்கற்கல்லும்...!

புதிதாய் கட்டப்பட்ட
சொந்தவீட்டில் முதலில்
காலடி படும்போது
பாத நுனிவிரல்கூட
நிம்மதி பெருமூச்சு விடக்கூடும்...!

வாழ்ந்துப் பார்க்கத்தான் வேண்டும்
சொந்த வீட்டில்
சுயமாய் சுவாசிக்க...!

Friday, 25 November 2011

விரட்டியடிக்கும் வாழ்க்கை

இன்னும்
கட்டிமுடிக்கப்படாத வீடு...

அப்பாவின்
விருப்பஓய்வு பணத்தில்
செய்துமுடித்து
ஆறே மாதத்தில்
வரதட்சனைக்காக
திருப்பியனுப்பப்பட்ட அக்கா...

ஆயுட்கால நோயிற்கு
ஆட்பட்ட அம்மாவிற்கு
ஆகும் மருத்துவசெலவு..

என
விரட்டியடிக்கும் வாழ்க்கை...

ஏபிசி நிறுவன
வாசலில்
சான்றிதழ்களுடன்...!

Tuesday, 15 November 2011

பருவம்

திமிர் கூட
எவ்வளவு அழகு என்று
திமிறி நிற்கும்
உன்
பருவம் கண்டபிறகே
தெரிந்துகொண்டேன்...!

Saturday, 29 October 2011

மதுகுடித்த பூக்கள்

நாகரீகத்தின் விளிம்பில் நின்று
இடையறாது கால்கள்
இசையில் நடனமிட
வளைந்து நெளியும் இடுப்பினில்
தொப்புளைப் பற்றி
அழுந்துகிறது
சற்றுமுன்
பார்வையில்  அறிமுகமான
தோழனின் கைகள்....!

மதுவேறித் தள்ளாடும் உடம்பு
மதுவேற்றுகிறது
அரங்கின் அநேக
ஆண்களுக்கு....!

அறியாத மச்சங்களும்
தட்டுப்படும் நடனஅசைவில்
அழைப்புக்கடிதம் விடுத்தபடி
திரண்ட மார்புகள்....!

வார இறுதியில்
வேளைப்பளு நீங்க என
நள்ளிரவு தாண்டியும்
களிப்புடனிருக்கும்
மென்பொருள் பெண்ணே
உன்
பெண்பொருள் என்ன?

Saturday, 8 October 2011

மிச்சமிருந்தது எங்களுக்கான தீபாவளி

அழுது அடம்பிடித்து
துக்கம் தாளாமல் விம்மிய
சில நாட்களுக்கு பிறகே
வீடு வந்து சேரும்
எனக்கும் என் தங்கைக்குமான
புத்தாடை.

அம்மாவின்
கை அக்குளில் கிழிந்திருந்த
ஜாக்கெட்டை பற்றியோ
அப்பாவின்
அழுக்கு படிந்த
வெள்ளை வேட்டியை பற்றியோ
கவலை இருந்ததில்லை.

சுருள் பட்டாசு,கொள்ளு பட்டாசு
உதிரி பட்டாசுதான் என்றாலும்
அனுஅனுவாய் வெடித்து மகிழ்ந்து
மருந்து கைகளுடன் திரிகையில்
அம்மாவின் பலகாரம்
இரண்டாம்பட்சம்தான்.

தெருவில்
சரசரமாய் வெடித்து
வாணவேடிக்கை பார்த்து
மத்தாப்பு சுற்றி மகிழ்ந்து பின்
வீட்டினுள் அடங்கும்
பெரிய வீட்டுக்காரர்களுக்கு
முடிந்தது
அவர்களுக்கான தீபாவளி.

மறுநாள் விடியலின்பின்
தெருவெங்கும் கிடந்த
பட்டாசு காகித்ததின் குவியலில்
வெடிக்காமல்போன பட்டாசுகளின்
சேகரிப்பில் மிச்சமிருந்தது
எங்களுக்கான தீபாவளி.

Wednesday, 28 September 2011

கனவு

காய்கறி அறியும்போது
தவறுதலாய்
அறிவாள்மனையில்
கை பட்டதும்
இரத்தம் சொட்ட....
திடுக்கிட்டு எழுந்தேன்
கனவுக்கெப்படி தெரியும்
நீ
சமையலறையே காணாதவளென..!

Saturday, 24 September 2011

பெருத்த வலியினொடு

வயிற்றில் எட்டி உதைத்து
இந்த உலகைக் காண
வெளியேறத் துடிக்கும்
உன் உந்துதலில்
என்
பிறப்புறுப்பில் ஏற்படுத்திய
எல்லையிலா வலியினொடு
உனை ஈனும் நிமிடங்களில்
உன்
முதல் குரல் கேட்டபடியே கண்ணயர்ந்தேன்.
உடலின் வெப்பம்
வெகுவென குறைந்து
போர்வைகளுக்குள் நடுங்கியபடியே
இடுப்பின் வலி நீங்காது
துடித்தபடி கிடந்தேன் - கூடவே
நீ பிறந்ததும்
அள்ளி அணைக்கமுடியா
பெருத்த வலியினொடும்...
                                                by  suresh

Monday, 19 September 2011

வரம்

நிறைகுடம் சுமந்து
நீ செல்கையில்
சில துளிகள் மட்டுமே
வரம் பெற்றிருக்கின்றது
உன்
இடையினில் வழிந்தோட....!

Monday, 12 September 2011

வினையாலணையும் காதல்

நான்
உன்னை கலைத்தேன்
நீ
என்னை கலைத்தாய்...

நான்
உன்னில் மூழ்குகிறேன்
நீ
என்னுள்  மூழ்குகிறாய்...

நீயும் கடல்
நானும் கடல்

தாகம் கடலுக்கு...

வைத்த மல்லியும்
மூச்சுத் திணறி
மாய்த்துப்போனது...

கலைந்து கிடக்கும்
ஆடைகளை போலதான்
இப்போது
நம் நிலையும்...

ஆடைகளுக்கும் சிறுவருத்தம்
தன் பங்கீடு
குறைந்ததை எண்ணி...

சொர்க்கத்தின் எளியவழி
கண்டுகொண்டோம் நம்மிடமே...

இருப்பினும்
இருட்டின் வேலைநேரம்
நீட்டிக்கப்பட வேண்டும்!

Wednesday, 7 September 2011

சிறுவயது உலகம்

தேங்கிய மழைநீரில் ஆடிக்கொண்டபடியோ...

வேலிகாத்தான் முட்செடிமீது
தலைதூக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
ஓணானை
வலையிட்டு பிடித்தபடியோ...

வழிநெடுக நிற்கும்
நாவல் மரங்களிலும்;புளிய மரங்களிலும்
பழங்கள் பறிக்கும் முயற்சியில்
மரத்தின் மீதேறியோ
கற்களை வீசியபடியோ...

உனிமுள் பூக்கள் பறித்து
ஒருவர் மீதொருவர் பூக்களை சொறிந்தபடியோ...

என வீடு திரும்பும்
பள்ளி சிறுவர்கள் உலகத்தில்
கற்க நிறைய இருக்கிறது!

Tuesday, 16 August 2011

ஞாபகம்

எப்போதோ
வாங்கியிருக்கிறேன்
காதலியிடம்
சில முத்தங்கள்.....
இப்போது
ஞாபகப்படுத்துகிறது
குழந்தையின்
சிறு முத்தங்கள்.....!

Monday, 8 August 2011

கூடல்

வாழ்க்கையின் நதிதனில்
காதல் காமம் இரண்டுமே
கலந்தோடி
அர்த்தம் தேடுகிறது இரட்டைகிளவிபோல..

காதல்புரிய முன்வரும்போது
மோகமுள் குத்தி காமம் ஒழுகியது!

காமம் பருக முன்வரும்போது
நுழைவாயில் காதலால் திறந்தது!

காதல் நழுவி காமத்தில் விழுந்து-பின்
எழுந்து காதலையே உடுத்திக்கொள்கிறது!

காதல் சிலநேரம் காமத்தின் கதவைத் தட்டுகிறது;
சிலநேரம் கதவை உடைத்தெரிந்துவிட்டு
காதல் காமமாகிறது...!
காமமாகி காமமாகி பின் காதலாகிறது
காமத்தின் பிடியில் மேலும் காதலாகிறது.

புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிபோல்
காமத்தின் முன்னும் பின்னும் காதலால் நிறைகிறது...!
                                                                          By   Suresh

Wednesday, 3 August 2011

நெருடல்

நெருடலாகதான் இருக்கிறது
ரோஜாவின் மணமும்
பிணத்தின்மீது
மாலையாகும்போது.

Tuesday, 2 August 2011

பிழை சேர்த்துவிட்டான்

மனவளத்தைப் பெருக்க
ஆன்மீகம் நாடியவன்
மனமலத்தைப் பெருக்கிக்கொண்டான்...

உடலை மட்டும் கழுவிக்கொண்டவன்
உளத்தைக் கழுவ மறந்துவிட்டான்...

கடவுள் என்றான்
பெண்களை தன் அறையில்
கட  உள் என்றான்...

ஆன்மசக்தி அளிக்கிறேன் என்றவன்
தன்
ஆண்மை சக்தியை அளித்துக் கொண்டிருக்கிறான்...

குடும்பம் மறந்தவள்
குடு  இன்பம் என
அங்கே நாடுகிறாள்...

தேசம் தாண்டி யோகக் கலை சேர்ப்பேன் என்றவன்
பிழையையல்லவா சேர்த்துவிட்டான்.!

Wednesday, 20 July 2011

போஸ்ட் ஆபீஸ்

போன வருட
பொங்கலுக்கு
சந்தையில் வாங்கிய
குப்பனின் டவுசர்
இப்போது
"போஸ்ட் ஆபீஸ்....."

புதுசு வேண்டுமென
அழுது
அடம் பன்னியதின்
பலனாக
மூடப்பட்டது
"போஸ்ட் ஆபீஸ்.....!"

Tuesday, 12 July 2011

பலவித உண்ணல் முறையை குறிக்கும் சொற்கள்

உறிதல்            - நீர்ப்பொருளையும் கூழ்மம் போன்ற நெகிழ்ச்சிப் பொருளையும்
                                காற்றால் வாய்க்குள் இழுத்தல்.
பருகுதல்          - நீர்கலத்திற் பற்படக் குடித்தல்.
அருந்துதல்     - சிறிது சிறிதாகக் குடித்தல்.
மாந்துதல்        - பேரளவாக குடித்தல்.( மாந்து மாந்தென குடிக்கிறான் என்பது
                                வழக்கு.
குடித்தல்          - நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.
சப்புதல்           - ஒன்றினை மெல்லாமல் நாவிற்கும் அண்ணத்திற்கும் 
                               இடையிலிட்டு நெருக்கி அதன் சாறினை மெல்ல மெல்ல
                              உறிஞ்சுதல் அல்லது அப்பொருளினை சிறிது சிறிதாகக்
                              கரைத்தல்.
சுவைத்தல்    - ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.
சவைத்தல்    - மெல்லிய பொருளை மெல்லுதல்.(குழந்தை தாய்ப்பாலைச்
                              சப்புதல்)
சூம்புதல்(சூப்புதல்)-தித்திப்புக் குச்சும்,மூளையெலும்பும்,விரலும் வாயிலிட்டு
                                         சப்புதல்.
தின்னுதல்    - பழம்,பலகாரம் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளல்.
உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்.
சாப்பிடுதல்  - குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த
                             சோற்றினைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது
                             அவையின்றி )உட்கொள்ளல்.
அசைத்தல்  - விலங்கு அசையிடுதலைப் போல் அலகை அசைத்து உண்ணுதல்.
அயிலுதல்     - குழந்தை அளைந்து சோறுண்ணுதல்.
விழுங்குதல் - மெல்லாமல் சுவை பாராமல் ஒரே தடவையில் விரைந்து
                               வாய்வழி வயிற்றிற்குள் இடுதல்.
ஆர்தல்            - வயிறு நிரம்ப உண்ணுதல்.
மொசித்தல்   - பலர் கூடி உண்ணதல்.
மிசைதல்       - விருந்தினரை உண்பித்து மிஞ்சியதை உண்ணுதல்.

Wednesday, 6 July 2011

நீயும் நானும்


*  தெளிந்த ஓடையில்
    தெரியும்
    கூழாங்கற்களைப் போலவே
    உன் நினைவுகளும்
   அடி மனதில்
   அழகாய் சிதறியபடி...

*  ஒவ்வொரு கூழாங்கற்களை
    எடுக்கும்போதும்
    ஒரு சலசலப்பு இருப்பதைப்போலவே
    உன் நினைவுகளும்
    ஏற்படுத்தவே செய்கிறது.

*  உன்னை ஞாபகப்படுத்தும்
   அநேக அடையாளங்களால்
   சில பொருட்களில்
   உன்னை பதித்துவிட்டு
   சென்றிருக்கிறாய்
   உனக்கு தெரியாமலேயே...

*  எங்கோ ஒரு மூலையில்
    நீயும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
    என்னைப் பற்றிய நினைவுகளை
    சுமந்துகொண்டு.....
    என்னைப்போலவே.....
                                     by suresh

காதல் வசம்


*  ஊசித்தூறல் பட்டு
   பாறைகள் உடைபடுவதில்லை- ஆனால்
   உன் ஊசிப்பார்வையில்
   நெஞ்சம் உடைபடுகிறதடி.....

*  கடலலைகள் பட்டு
    கரைகள் கரைவதில்லை- ஆனால்
    உன் நினைவலைகளில்
    மனம் கரையுதடி.....

*  வெய்யில் பட்டு
    காகம் வெளுப்பதில்லை- ஆனால்
    உன் நிழலினினால்
    ஜீவன் வெளுக்குதடி.....

*  மின்னல் பட்டு
    மின்மினி ஒளிர்வதில்லை- ஆனால்
    உன் கண்களினால்
    காதல் ஒளிர்கிறதடி.....

*  தென்றல் பட்டு
    வேர்கள் சிலிர்ப்பதில்லை- ஆனால்
    உன் கைவிரல் தீண்டலில்
    உயிர் சிலிர்க்குதடி.....
                                        by suresh




நினைவுகள்

* நானறியா நேரங்களில்
  நினைவின்
  சாளரம் திறந்து
  வருகிறாய்!

* கடந்துபோன நிஜங்களின்
  நிழல் ஓவியத்தின்
  வர்ணங்களில் சிக்கி
  பாறாங்கல்லாய் கணக்கிறது
  இதயம்!

* எதையும் மறப்பதற்கில்லை
  பூக்களின் வாசம்போல்
  புதைந்துகிடக்கின்றது
  பார்வைக்கு மட்டும்
  அகப்படாமல்!
                          by suresh

இலையுதிர் காலம்

*  மழை வேண்டி
    மரங்கள் நடத்தும்
    நிர்வாணப் போராட்டம்.!



பேச்சு சுதந்திரம்

*  எனக்கு பிடித்த விளையாட்டு
    பம்பரம் விடுதல் என்றேன்
    நீ ம.தி.மு.க வா..?என்றார்கள்!

*  பழங்களில் விரும்பி சுவைப்பது
    மாங்கனி என்றேன்
    நீ பா.ம.க வா..?என்றார்கள்!

*  செடிகளின் அழகு
    இலைகள்
    துளிர்க்கையில் என்றேன்
    நீ அ.தி.மு.க வா..?என்றார்கள்!

*  அதிகாலை வழிபடுவது
    சூரியனை என்றேன்
    நீ தி.மு.க வா..?என்றார்கள்!

*   பேசாமல் கட்சிகளுக்கு
    வழக்கத்திலில்லா உருவம்
    சின்னமாக அறிவிக்கலாம்-சிறிதேனும்
    கிடைக்கும்
    பேச்சு சுதந்திரம்!