Saturday, 8 October 2011

மிச்சமிருந்தது எங்களுக்கான தீபாவளி

அழுது அடம்பிடித்து
துக்கம் தாளாமல் விம்மிய
சில நாட்களுக்கு பிறகே
வீடு வந்து சேரும்
எனக்கும் என் தங்கைக்குமான
புத்தாடை.

அம்மாவின்
கை அக்குளில் கிழிந்திருந்த
ஜாக்கெட்டை பற்றியோ
அப்பாவின்
அழுக்கு படிந்த
வெள்ளை வேட்டியை பற்றியோ
கவலை இருந்ததில்லை.

சுருள் பட்டாசு,கொள்ளு பட்டாசு
உதிரி பட்டாசுதான் என்றாலும்
அனுஅனுவாய் வெடித்து மகிழ்ந்து
மருந்து கைகளுடன் திரிகையில்
அம்மாவின் பலகாரம்
இரண்டாம்பட்சம்தான்.

தெருவில்
சரசரமாய் வெடித்து
வாணவேடிக்கை பார்த்து
மத்தாப்பு சுற்றி மகிழ்ந்து பின்
வீட்டினுள் அடங்கும்
பெரிய வீட்டுக்காரர்களுக்கு
முடிந்தது
அவர்களுக்கான தீபாவளி.

மறுநாள் விடியலின்பின்
தெருவெங்கும் கிடந்த
பட்டாசு காகித்ததின் குவியலில்
வெடிக்காமல்போன பட்டாசுகளின்
சேகரிப்பில் மிச்சமிருந்தது
எங்களுக்கான தீபாவளி.

1 comment:

  1. Srinivasan Muniyappan1 November 2011 at 03:15

    அருமையான கவிதை சுரேஷ்

    ReplyDelete